எழுதியவர்: டாக்டர் மனோஜ் ஷர்மா
குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அதுவரை அவர்களைக் கவனித்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் உடைந்துவிடுகிறார்கள், அவர்களால் தீவிர துயரத்தை, சிரமமான, வலிமிகுந்த, மற்றும், பெரும்பாலும் பதில் சொல்ல இயலாத கேள்விகள், எண்ணங்களைத் தவிர்க்க இயலுவதில்லை: ‘எனக்கு ஏன் இப்படி நடந்தது?’ அல்லது ‘அவருடைய மனத் துயரத்தின் அறிகுறிகளை நான் ஏன் உணரவில்லை?’ அல்லது ‘தற்கொலைக்கு முயற்சி செய்யுமுன் அவர் ஏன் என்னை அழைக்கவில்லை?’ அல்லது ‘நான் ஒரு நல்ல தாய்/ தந்தை இல்லை’. ஒவ்வொரு தற்கொலையும், குறைந்தபட்சம் ஆறு பேரைப் பாதிப்பதாகச் சொல்லப்படுகிறது. உதாரணமாக, குடும்ப உறுப்பினர்கள், சக ஊழியர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், வகுப்புத்தோழர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள்.
பல நேரங்களில், துயரத்திலிருந்து மீள முயற்சிசெய்யும் குடும்பம் தங்களுடைய உணர்ச்சிகளிடமே தோற்றுவிடுகிறது. அவர்களுடைய உணர்ச்சிகள் தனியே நிகழலாம், அல்லது, குழுக்களாக நிகழலாம். அவை அவ்வப்போது வந்துபோகலாம், அல்லது, நீண்டநாள் நீடிக்கலாம். ஒருவர் துயரத்திலிருந்து மீளவேண்டுமென்றால், இவற்றைச் சமாளிக்கவேண்டும்.
அதிர்ச்சி: ஒருவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டால், அவருடனிருந்த பிறர் பெரும்பாலும் உடனே உணர்வது, அதிர்ச்சி என்கிற எதிர்வினையைதான். இதோடு, உடல் மற்றும் உணர்வு மரத்தநிலையும் அவர்களுக்கு ஏற்படுகிறது.
கோபம்: பல நேரங்களில், இறந்தவர்களின் அன்புக்குரியவர்களும் குடும்ப உறுப்பினர்களும் மனித வாழ்க்கையின் நிலையில்லாமையை கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் (அல்லது, அதைக் கட்டுப்படுத்துகிறார்கள்). கோபம் என்பது, சோகத்தில் வரும் இன்னொரு எதிர்வினை, தற்கொலைசெய்துகொண்டு இறந்தவர்மீது கோபம், தங்கள்மீது கோபம், இன்னொரு குடும்ப உறுப்பினர்மீது கோபம், அல்லது, ஒரு நிபுணர்மீது கோபம் என இது பலவிதமாக அமையலாம்.
குற்றவுணர்ச்சி: ஒருவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டால், மற்ற குடும்ப உறுப்பினர்கள் தாங்கள் கவனிக்காத துப்புகளைத் தேடத் தொடங்குகிறார்கள், தாங்கள் எப்படித் தற்கொலையைக் கண்டறிந்து தடுத்திருக்கலாம் என்று சிந்திக்கிறார்கள். உதாரணமாக, தாங்கள் சொன்னவற்றை (அல்லது சொல்லாதவற்றை) எண்ணித் தங்களையே நொந்துகொள்வது, தாங்கள் அன்பை அல்லது அக்கறையை வெளிப்படுத்தவில்லை என எண்ணுவது, அவர்கள் செய்யத் திட்டமிட்ட (ஆனால், எப்போதும் செய்யாத) விஷயங்களை எண்ணுவது... இது ஒரு முடிவில்லாத கலைடாஸ்கோப்போல நீளும்.
பயம்: குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், இன்னொருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்வாரோ என்று பயப்படுதல்.
மனச்சோர்வு: தூக்கமின்மை, அல்லது, தொந்தரவான தூக்கம், பசியெடுப்பதில் மாற்றங்கள், களைப்பு மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைதல் போன்றவகைகளில் இது வெளிப்படுகிறது.
இந்தத் தீவிர உணர்வுகளில் பலவும், காலப்போக்கில் குறைந்துவிடும், அதன்பிறகும், சில உணர்வுகள் எஞ்சியிருக்கலாம், அவை எப்போதும் முழுக்கத் தீர்ந்துவிடாமலிருக்கலாம். ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாக சோகத்தை எதிர்கொள்கிறார்கள். அத்துடன், சில கேள்விகளுக்கு எப்போதும் பதில் கிடைக்காமல்போகலாம்.
தற்கொலையைத் தாங்கிக்கொள்ளுதல்
டாக்டர் மனோஜ் ஷர்மா NIMHANS மருத்துவ உளவியல் பிரிவுத் துணைப் பேராசிரியர்.
மேலும் விவரங்களுக்கு NIMHANS நல மையத்தைத் (NCWB) தொடர்புகொள்ளவும்: +919480829670/ (080) 2668594 காலை 9 மணிமுதல் மாலை 4:30 மணிவரை