இடப்பெயர்வைத் தாண்டி: நிறுவனங்கள் பணியாளர்களுடைய மாற்றத்துக்கு உதவ வேண்டும்

சமீபத்தில் அமெரிக்காவில் பல வாடிக்கையாளர் இடங்களில் இந்தியப் பணியாளர்களைப் பெரும் எண்ணிக்கையில் பணியமர்த்தியிருந்த நிறுவனம் என்னை அழைத்தது. இந்தப் பணியாளர்கள் அவர்களுடைய இருபதுகளில் இருந்தனர், சிலர் திருமணமாகாதவர்கள், மற்றவர்கள் திருமணமாகி இளம் குடும்பத்தைக் கொண்டவர்கள். சமீபத்தில் இந்தவகை மக்களிடையே அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் நிகழ்ந்ததால், அந்த நிறுவனம் என்ன பிரச்னை என்று கவனித்துத. அவர்கள் தவறாகச் செய்து கொண்டிருப்பவை என்ன? அவர்கள் தங்களுடைய பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய துணைகளை எப்படிச் சிறப்பாக ஆதரிப்பது? எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை முன்னமே தடுக்க என்ன செய்யலாம்? அவர்கள் தற்கொலை எண்ணத்துடன் இல்லாவிட்டாலும், வெளிநாட்டில் வேலை செய்யும்போது தங்களுடைய முழுச் சுயத்தை பணிக்கு கொண்டுவராதபடி அவர்களைத் தடுக்கும் உணர்வுச் சவால்கள் எவையேனும் உள்ளனவா?

இதனைக்கேட்டதும் என்னுடைய முதல் எதிர்செயல், ஓர் இளம் தாயாகவும் வீட்டில் முதல்முறையாகத் தங்கியிருக்க வேண்டிய தாயாகவும் புதிய நாட்டில் அந்நியச் சூழலில், தனிமையில் நல்லுணர்வுடன் இருக்க முயற்சிசெய்துகொண்டிருந்த, அதுபோன்ற என்னுடைய அனுபவத்துடன் இதனை இணைத்ததுதான். அந்தப் பணியாளர்களும் அவர்களுடைய துணைகளும் எதனைக் கடந்துகொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். என்னால் உதவ முடியும் என்று உடனடியாக எனக்குத் தெரிந்தது. இந்தத் தலைப்பில் நான் ஆழமாகப் பார்க்கத் தொடங்கிய போது, என்னுடைய அனுபவம் தனித்துவமானது இல்லை என்று உணர்ந்தேன். என்னுடைய சூழ்நிலையில் ஒவ்வொருவரும் நான் செய்ததை அனுபவிப்பார்கள், ஆனால் வெவ்வேறு நிலைகளில் அனுபவிப்பார்கள். சிலர் மற்றவர்களைவிடச் சிறப்பாகச் சமாளிப்பார்கள். எனக்கு இப்போது தெரிவது அப்போது தெரிந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அனுபவத்தால் வித்தியாசமாக உணர்ந்ததற்குப் பதிலாக, நான் என்னுடைய அனுபவத்தை அப்போது சாதாரணமாக்கியிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!

புதிய நகரத்திற்கோ நாட்டிற்கோ எந்த இடப்பெயர்வும் மூன்று நிலைகளில் ஒழுங்குபடுத்தல்களைக் கொண்டுள்ளது. முதலாவது, வாழ்க்கைச் சூழ்நிலைகள், காலநிலை, உணவு, வீட்டுவசதி, வாழ்க்கைச் செலவுகள், உட்கட்டமைப்புப் பிரச்னைகள் போன்ற பொதுவான ஒழுங்குபடுத்தல்கள் உள்ளன. பிறகு வீட்டிலும் பணியிடத்திலும் ஏற்கனவே உள்ள மற்றும் புதிய உறவுகளுடன் உரையாடல்களை ஒழுங்குபடுத்தல். நிறைவாக, புதிய வேலை மற்றும் அதன் எதிர்பார்ப்புகளுக்கு மாறுவதன் பின்னணியில் பணி ஒழுங்குபடுத்தல். எந்த மாற்றமும் சவாலானதாக இருக்க முடியும், ஆனால் பல நிலைகளில் மாற்றங்களுக்குப் பொருந்திக்கொள்வது ஒருவரை வேரைவிட்டுப்பிடுங்கியதாக அல்லது பிடிமானம் இல்லாததாக உணரச் செய்யும் திறம் கொண்டது.

நாடுவிட்டு நாடு செல்பவருடைய தகவமைத்தல் சுழற்சி பற்றிப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன, எழுதப்பட்டுள்ளன, அது புதிய வாய்ப்பு பற்றிய ஆரம்ப எதிர்பார்ப்பு உற்சாகத்துடன் அறியாதவற்றைப் பற்றிய பதற்றத்துடன் இணைந்த புதிய வெளிப்பாட்டுடன் தொடங்குகிறது. புதிய ஆரம்பங்களைச் சுற்றித் தேனிலவுக்கட்டம் உள்ளது,  அதன் பிறகு நகர்விற்குத் தேவையான முயற்சி மற்றும் அதன் விளைவான சோர்வை உணர்தலினால் ஏற்படும் கோபம் மற்றும் எரிச்சல் உள்ளது. நான் மூன்று மாதக் கைக்குழந்தையுடன் இந்த இடப்பெயர்வை மேற்கொண்டதையும், என்னுடைய வீட்டைக் காலி செய்து பொருட்களை அனுப்பியபோது உணர்ந்த ஆழமான இழப்பு உணர்வும் எனக்கு நினைவில் உள்ளது. திடீரென வீடு என்று அழைக்கக்கூடிய எந்த இடமும் இல்லை! நான் உவமையாகவும் உண்மையாகவும் சாலையில் நின்றேன். அந்த உணர்வு என்னுடைய புதிய வீடு ஒரு மாதத்திற்கு பிறகு அமைக்கப்படும் வரையில் இருந்தது.

ஒருவர் புதிய நகரத்திலோ நாட்டிலோ குடிஅமரும்போது அவரைக் கலாசார அதிர்ச்சி தாக்குவதால் உற்சாகம் குறைந்துவிடுகிறார். கலாசாரம் என்பதில் மக்கள் என்ன நினைக்கிறார்கள், கூறுகிறார்கள், செய்கிறார்கள், உண்கிறார்கள், அணிகிறார்கள் போன்ற பலவும் உண்டு. உலகம் சுருங்கிக் கொண்டிருக்கிறது, அது உருகும் பானையைப் போல் உள்ளது என்கிறார்கள். அப்படியெனில் கலாசாரம் ஏன் முக்கியமானது? ஒரே பிராண்ட்களை உலகம் முழுவதும் அணிவதால், பயன்படுத்துவதால் எல்லாரும் அதே மதிப்புகளைக் கொண்டுள்ளார்கள், அல்லது அதே முடிவுகளை எடுப்பார்கள் என்பதில்லை. ஒரு பனிப்பாறையைப் போல், கலாசாரத்தின் 90% நம்முடைய புலன் உணர்வுக்கு வெளியே கண்ணுக்குத் தெரியாததாக – மனப்பாங்குகள், மதிப்புகள் மற்றும் கருதுகோள்கள் போன்ற, அழகு, அடக்கம் இவற்றின் கருத்தாக்கம், குழந்தை வளர்ப்பு, பாவம், சமூக இயங்குதன்மை போன்ற மற்றவற்றையும் உள்ளடக்கியதாக - உள்ளது. ஓர் எடுத்துக்காட்டாக, குழந்தைகளை அவர்களுடைய படுக்கையில், தனியாக ஆரம்பத்திலிருந்தே தூங்க வைப்பது முக்கியம் என்று  அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். அவர்கள் குழந்தையைத் தொட்டிலில் வைத்துக் கதவை அடைப்பதற்கு ஒன்றிரண்டு முறை யோசிப்பதில்லை, பெரும்பாலும் குழந்தைகளை அழுதே தூங்க விடுகிறார்கள். பெரும்பாலான இந்தியப் பெற்றோருக்கு இது கற்பனைகூடச் செய்ய இயலாதது. இந்த இரு முன்மாதிரிகளிலும் சரி, தவறு என்று எதுவும் இல்லை. அவை வித்தியாசமுடையவை மட்டுமே. நான் விரைவாக விஷயங்களை “வித்தியாசமானவை அதனால் கெட்டவை” என்றோ, “உயர்ந்தது” அல்லது “தாழ்ந்தது” என்றோ பார்க்காமல் வெறுமனே “வித்தியாசமானவை” என்று பார்க்கத் தொடங்கும்போது என்னால் எளிதில் ஒருங்கிணைய முடிகிறது. நான் மதிப்பிடுதலைக் குறைத்துக்கொள்ளத் தொடங்கும்போது என்னை நானே உட்கிரகிக்கவும் புதிய சூழலிலிருந்து நன்மை அடையவும் அனுமதிக்கிறேன்.

புதிய கலாசாரத்தை ஏற்றுக் கொண்டு ஒரு புதிய இயல்பை உருவாக்கிக் கொள்வது, என்னை அச்சமடைந்து ஒடுங்கி இருப்பதாக உணர்வதற்குப் பதிலாக, கற்றுக் கொண்டு வளர அனுமதிக்கிறது. இதைச் செய்ய இயலும்போது தான், நான் பொருந்திக் கொண்டு, வசதியாகவும், குறைந்த பாதுகாப்பின்மையுடனும், குறைந்த தனிமையாகவும் உணர முடியும். அதன் பின்னர் மட்டுமே என்னால் என்னை நோக்கி வந்த சிறந்த வாய்ப்புகளை உண்மையில் பயன்படுத்த இயலும்.

அதன்பிறகு, திடீரென, எனக்குத் தெரியும் முன்பே நான் திரும்ப இடம்பெயரும் நேரம் வந்தது, மறு இடப்பெயர்வின் பதற்றத்தை  எதிர்கொண்டேன். அது தலைகீழ் கலாசார அதிர்ச்சிக்கான நேரம் – ஒரு காலத்தில் எனக்குத் தெரிந்தவையாக இருந்தவற்றுடன் எதிர்பாரா மோதல். ஒருவர் ஏங்குகிற, விரும்பிக் கற்பனை செய்கிற சொந்த நாட்டின் குறைகள் தோன்றத் தொடங்கின – இப்போது அவை உலகின் பரந்த வெளிப்பாட்டால் அப்பட்டமாகத் தெரிந்தன. சொந்த இடம், பழைய சமூக வலைப்பின்னல்களுடனான மறு ஒருங்கிணைவு சவாலானது, ஏனெனில் ஒருவர் கடந்துபோகும்போது, மக்களும் கடந்து போகின்றார்கள்.

நான் இந்தத் தகவமைத்துக் கொள்ளல் சுழற்சியை முதலில் கற்றுக் கொண்டபோது, அது எனக்கு ஓர் அதிர்ச்சியாக இருந்தது, அமெரிக்காவுக்கு இடம்பெயரும்போது உணர்ந்த அனைத்தும், அங்கே என்னுடைய தங்குமிடம், அதைத் தொடர்ந்த திரும்பி வரும் பயணம் ஆகியவை சாதாரணமாக இருந்தன – அது, அப்படிப்பட்ட சூழ்நிலையில் அனைவரும் கடந்துபோகும் ஒன்றாக இருந்தது. மக்கள் அதை வித்தியாசமாகக் கையாளுகிறார்கள் அவ்வளவுதான் – சிலர் என்னை விடச் சிறப்பாக, சிலர் என்னை விட மோசமாக.

இடப்பெயர்வை வெற்றிகரமாக ஆக்குவதன் பெரும்பகுதி, ஒருவர் வேறுபாடுகளான – மொழி, உணவு, உடைகள் மற்றும் சடங்குகள், அல்லது மிகவும் முக்கியமானவையான மதிப்புகள், நம்பிக்கைகள், சமூக ஒழுங்குகள் போன்றவற்றை மதிப்பிடாத உலக மனநல நிலையுடன் ஏற்றுக் கொள்ள இயலுவதைச் சார்ந்திருந்தது. நிறுவனங்கள் பணியாளர்களை இந்த உணர்ச்சிக் கண்ணிகளிலிருந்து நகர்த்துவதற்கு உதவுவதன்மூலம் – அவர்களைக் கோப்பை பாதி காலியாக உள்ளது என்பதற்கு பதிலாகப் பாதி நிறைந்துள்ளது என்று பார்க்க உதவுவதன்மூலம்; வேறுபாடுகளைச் சிறந்தவை, மோசமானவை என்று இல்லாமல் பார்க்க உதவுவதன்மூலம் உண்மையில் நன்மையடைய முடியும். அப்படிச் செய்வதால், துணைகள் மற்றும் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவது நல்ல பலனளிக்கும்.

பணியாளர் மற்றும் நிறுவனத்திற்கு இடப்பெயர்வு வெற்றிகரமாக இருக்க, அது பணியாளர்க்கு மட்டும் இல்லாமல் இடம்பெயர்ந்த குடும்பத்தின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் வெற்றிகரமானதாக இருக்க வேண்டும். மனைவி தொலைந்துபோனதாக, பிடிமானம் இல்லாததாக உணர்ந்தால், குழந்தை பள்ளியின் சமூகச் சவால்களைச் சமாளிக்க இயலவில்லை எனில், இடம்பெயர்ந்த பணியாளருடைய பெரும் ஆற்றல் உறிஞ்சப்படும். அவர்கள் குடும்பத்தின் சவால்களின் மீது கவனமில்லாமலோ அவற்றால் தொடர்ந்து கவனம் சிதறியவர்களாகவோ மாறலாம். இரண்டுமே அவர்கள் இடம்பெயரச் செய்யப்பட்ட நிறுவனத்தின் நோக்கத்திற்கு உதவியானது இல்லை.

பணியாளர்களை ஓர் இடத்திலிருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றோர் இடத்தில் அவர்கள் வேர்விட்டு வளர வேண்டும் என்று எதிர்பார்ப்பது நிறுவனங்களுக்குச் சாத்தியமில்லாதது. ஒரு தாவரம் ஒரு தொட்டியிலிருந்து மற்றொரு தொட்டிக்கு இடமாற்றப்படும்போது, அது புதிய பானையில் நன்கு வெற்றிகரமாக வளர்வதற்கு முன்பு ஆரம்பக் கட்டத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. அது நம்முடைய மக்களுடைய தோட்டத்திலுள்ள பணியாளர்களுக்கும் பொருந்தும்!

ஒரு பணியாளர் இடம்பெயரும்போது நிறுவனங்கள் தவிர்க்கக்கூடாதவை என்ன:

  1. புதிய நாட்டின் அல்லது புதிய நகரத்தின் கலாசாரத்தில் கவனம் செலுத்துகிற, அவர்கள் புதிய சூழலில் வாழும்போது அனுபவிக்கும் முதன்மை வேறுபாடுகள் குறித்த கலாசார வழிகாட்டல் அமர்வை பணியாளர்க்குக் கொடுக்கவும். இந்த வழிகாட்டுதல் குழந்தைகள் மற்றும மனைவிகளுக்கும் (அவர்களுடைய தேவைகளில் கவனம்செலுத்தும்வகையில்) வேண்டும்.
  2. பணியாளர்களும் குடும்பத்தினரும் கலாசாரத்தின் வேறுபாடுகளை, வேறுபாடுகளாக மட்டும் (எதிர்மறை மற்றும் நேர்மறை என்று இல்லாமல்) பார்க்க உதவுதல்.
  3. உங்கள் பணியாளர்கள் புதிய இடத்தை வந்தடைந்ததும் அவர்களுக்குத் தேவைப்படும் வளங்களின் கையடக்கப் பட்டியலைக் கொடுக்கவும். அது பொருட்கள் தொடர்பாக மட்டுமில்லாமல், உணர்ச்சி, சமூக, கலாசார ரீதியில் பொருந்திக் கொள்வதற்கான வளங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  4. அவர்கள் நிறுவனத்தின் பணியிடத்தில் பொருந்திக் கொள்வதற்கு மட்டுமில்லாமல் குடும்பத்தினர் அந்த இடத்தில் பொருந்திக் கொள்வதற்கும் வசதி செய்துதரவேண்டும், அந்த நேரத்தில் அவர்களை எடைபோடாமல், மரியாதையுடன் ஏற்றுக் கொள்ளவேண்டும், அத்தகைய வழிகாட்டுநர் ஒருவர் இருப்பதை உறுதிப்படுத்த முயற்சிசெய்யவும்.
  5. அவர்கள் புதிய நாட்டுக்கேற்ப தங்களை, தங்கள் குடும்பத்தினரை மாற்றியமைத்துக்கொள்ளும் சுழற்சிகளை, அவை சிக்கல்களாக மாறுமுன் ஆலோசிக்க வாய்ப்பளிக்கும் EAP ஆலோசனையை அணுக வசதி செய்யவும். மேலும் இது மாற்றிமைக்கும் சுழற்சியை இயல்பாக உணர உதவுகிறது.

மவுலிகா ஷர்மா பெங்களூரைச் சார்ந்த ஓர் ஆலோசகர், அவர் மனநலம் சார்ந்த இடங்களில் பணியாற்றுவதற்காகத் தன்னுடைய பெருநிறுவனத் தொழில்வாழ்க்கையை விட்டு வெளியேறியவர் ஆவார். மவுலிகா  உலகளாவிய பணியாளர் நல நிறுவனமான வோர்க்பிளேஸ் ஆப்ஷன்சில் பணியாற்றுகிறார், மேலும் பெங்களூர் ரீச் மருத்துவமனையில் பணிபுரிகிறார்

இந்தக் கதை ”இடப்பெயர்வைத் தாண்டி” என்ற தொடர்வரிசையில் இடம்பெற்றுஇள்ளது, இந்தத் தொடர்வரிசை, இடப்பெயர்வு நம்முடைய உணர்வு மற்றும் மனநலத்தில் எப்படித் தாக்கம் செலுத்துகிறது என்பதைப் பேசுகிறது. இதுபற்றி மேலும் வாசிக்க:
1. நாம் இடப்பெயர்வின் உணர்ச்சித் தாக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்: மருத்துவர் சபினா ராவ்
2. இடம்பெயர்தல் இவை அனைத்தும் சேர்ந்தது: சவால், சாகசப்பயணம் மற்றும் தன்னைப் பற்றி அறியும் வாய்ப்பு: ரேவதி கிருஷ்ணா

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org