மனத்துக்கும் தோலுக்குமான தொடர்பை ஆராய்தல்

அழுத்தம் நம்முடைய மனநலத்தில் கொண்டுள்ள விளைவுகள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் நிபுணர்கள் அது நமது உள்ளுறுப்புகளை மட்டுமில்லாமல் தோலையும் பாதிக்கிறது என்கின்றனர். மனம் மற்றும் தோலுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொள்ள, அமெரிக்கச் சரும அகாதெமியில் பன்னாட்டு நிபுணராக உள்ள மரு அன்கா குமாரிடம் பேசினோம்.

மூளை மற்றும் தோலுக்கு இடையிலான தொடர்பு என்ன?

மூளை மற்றும் தோலுக்கு இடையே வலிமையான உடல் தொடர்பு உள்ளது. அது கருமுட்டை உருவாகும் நமது வாழ்வின் ஆரம்ப நாட்களிலேயே தொடங்கிவிடுகிறது. மூளை மற்றும் தோல் ஓரே வகை செல் குழுக்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன, அதன் பெயர் எக்டோடெர்ம் அடுக்கு, இது மூளை மற்றும் தோலுக்கு இடையே அடிப்படை மனநலத் தொடர்பை உருவாக்குகிறது

மன உணர்வைத் தோல் பிரதிபலிக்குமா?

நாம் கூச்சப்படும்போது கன்னம் சிவக்கிறது மனம் நினைப்பதைத் தோல் பிரதிபலிக்கிறது என்பதற்கு இதுவே அடையாளமாகும். அதுபோல், தோல் மன அழுத்தத்துக்கும் பதிலளிக்கிறது.

அறிவியல்பூர்வமாகக் கூறினால், மன அழுத்தத்தால் தோலில் ஏற்படும் விளைவுகள் என்ன?

நாள்பட்ட மன அழுத்தம் நோய் எதிர்ப்புச்சக்தி அமைப்பில் குறுக்கிடலாம் என்பதை அறிவியல் ஆய்வுகள் சுட்டுக்காட்டுகின்றன, இது தோலின் குணமாகும் திறனைப் பாதிக்கிறது. மேலும் தோலின் எதிர்ப்புச்சக்தி செல்கள் மூளை மற்றும் நரம்பு அமைப்பால் பாதிக்கப்படுகின்றன, இதற்கு ரிசப்டார்கள் மற்றும் வேதியச் செய்தியாளர்களான நியூரோபெப்டைடுகள் வழிசெய்கின்றன. அறிவியலாளர்கள் இவற்றையும் தோலில் உள்ள பிற பொருட்களையும் ஆராய்ந்துவருகிறார்கள், அவை மனநல அழுத்தத்துக்கு எப்படிப் பதிலளிக்கின்றன என்று புரிந்துகொண்டுள்ளார்கள். நாள்பட்ட மன அழுத்தம் சில குறிப்பிட்ட தோல் பிரச்னைகளைப் பெரிதாக்கலாம் என்பதற்குச் சான்றுகள் அதிகரித்துவருகின்றன.

அப்படியானால். மனநலப் பிரச்னைகளால் தோலில் எதிர்வினைகள் ஏற்படலாம் என்று பொருளா?

சரும நோய்களுக்கு மனநலப் பிரச்னைகள் அறிகுறிகளாக இருக்கலாம். மேலும் சில மனநலப் பிரச்னைகளுக்குத் தோலில் வெளிப்பாடுகள் இருக்கலாம். அதே நேரத்தில், சில தோல் பிரச்னைகள், முகப்பரு சோரியாசிசு போன்றவை, மன அழுத்தத்தால் தீவிரமடையலாம். எனவே, பலவிதமான தோல், மன இடைவினைகள் உள்ளன. இவை மன –சருமக் குறைபாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

மன-சருமக் குறைபாடுகளைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்

மன சரும குறைபாடுகள் என்பவை, மனம் மற்றும் தோலுக்கு இடையேயான இடைவினைகளைக் கொண்ட நிலைகள் ஆகும். அவற்றைப் பல வகைகளாகப் பிரிக்கலாம்:

  1. மன உடலியல் குறைபாடுகள்: இவை உடலியல் அடிப்படை கொண்ட தோல் பிரச்னைகள். ஆனால் மன அழுத்தம் மற்றும் பிற உணர்ச்சிக் காரணிகளால் இவை மோசமாகலாம்.
    எடுத்துக்காட்டு: எக்சிமா மற்றும் சோரியாசிசு
  2. சரும அறிகுறிகள் கொண்ட மனநலக் குறைபாடுகள்:       எடுத்துக்காட்டு:
    டிரிகோட்டிலாமேனியா : நாள்பட்ட முடியை இழுத்தல்
    பாராசைட்டோசிஸ் கற்பனை: பாதிக்கப்பட்ட நபர், தனக்குப் புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணுகள் தொற்றுள்ளதாக நினைப்பார், ஆனால் அப்படி இருப்பதில்லை                                                                                       உடல் உருக்குலைவு: இதில் அந்த நபர் கற்பனையான உடல் குறைபாட்டால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பார்.
  3. மனநல அறிகுறிகள் கொண்ட சருமக் குறைபாடுகள்: இதில் குறிப்பிட்ட தோல் நிலைகள் கொண்டிருப்பதால் மனப் பிரச்னைகள் உருவாகின்றன. அருவெறுப்பு இந்தச் சூழல்களில் மன அழுத்தத்திற்கு காரணமாகும். 
    எடுத்துக்காட்டு: விட்டிலிகோ, சோரியாசிசு, அல்பினிசம், எக்சிமா:
  4. மற்றவை: மனநல மற்றும் சரும மருந்துகளின் மருந்துகள் தொடர்புடைய எதிரான விளைவுகள் இந்த வகையின் கீழ் வரும்.

சில வேளைகளில் மக்கள் பொதுவான, தீங்கற்ற தோல் நிலைகள் குறித்தும் பதற்றமடைவதாக நினைக்கிறீர்களா?

பெரும்பாலான பதின் பருவத்தினர் பருக்கள் குறித்து  அழுத்தமடைகின்றனர். அவர்கள் அதனை முடிந்தவரையில் விரைவில் போக்க விரும்புகிறார்கள். அவர்கள் வடுக்கள் மற்றும் எவ்வளவு சீக்கிரம் பருவின்றி இருக்கலாம் என்பது பற்றிக் கவலை கொண்டுள்ளார்கள். என்ன நடக்கிறது என்று அறியாமல் இருப்பது தேவையற்ற மன அழுத்தம் மற்றும் பயத்தை ஏற்படுத்தலாம். உண்மையில், பருக்கள் ஹார்மோன்கள் மாறுதல்களின் ஒரு வெளிப்பாடுதான், பெரும்பாலான நபர்கள் தங்கள் வாழ்க்கையில் அதை ஒருமுறையாவது அனுபவித்துள்ளனர். அது 25-30 வயதில் குறையும். அதைக் குறித்து அதிகம் கவலைப்படுவது மற்றும் அவற்றைக் கிள்ளுவது அதை மேலும் மோசமாக்கும்.

சில குறிப்பிட்ட தோல் நிலைகளைக்குறித்துக் கவலைகள் மற்றும் பதற்றம் கொள்வது மன அழுத்தத்தைக் கூட்டி, அதனைத் தீங்கான சுழற்சியாக்குமா?

ஆம், பருக்கள், செம்பட்டை முடி, வடுக்கள் அல்லது விடிலிகோ உடன் வரும் பலர், இந்த நிலைகள் அவர்களுடைய புறத்தோற்றத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களால் குறைந்த சுய மதிப்பைக் கொண்டிருக்கிறார்கள். சிலர் குறிப்பிட்ட தோல் நிலைகளைக் கண்டறியும் போது கவலையடைகிறார்கள் அல்லது கோபமடைகிறார்கள். அதுபோன்ற நேரங்களில், அவர்களுடன் நேரம் செலவழிப்பது முக்கியமாகும். அந்த நிலைகள், சிகிச்சைத் தேர்வுகள் மற்றும் நோயின் நிலை குறித்து அவர்களுக்குக் கற்பிப்பது சிகிச்சையளிக்கும் மருத்துவரின் கடமையாகும். மிக முக்கியமாக, மருத்துவர் அவர்களுக்கு ஆறுதலளிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும் மேலும் ஆதரவுக் குழுக்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

அளவுக்கதிகமாகக் கவலைப்படும் நபர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

மக்கள் இந்த நிலைகள் குறித்துப் புரிந்துகொள்ள உதவினால், அவர்கள் தங்களை நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள். மேலும், அவர்களுக்கு நோய் அல்லது நிலையைப் பற்றி விளக்குவது மற்றும் கற்பிப்பது முக்கியமாகும். எடுத்துக்காட்டாக, 90 சதவிகித உலக மக்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது பருவை அனுபவிக்கின்றனர். இந்த உண்மைகள் குறித்து அறிந்திருப்பது மற்றும் அதைப்பற்றித் தேவையின்றி மன அழுத்தமாக உணராதிருப்பது அவசியமாகும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org