தற்கொலை என்பது மிகவும் நுண்ணுணர்வான ஒரு விஷயம், பலகாலமாகச் சமூகம் அதனைக் களங்கமாகவே பார்த்துவந்துள்ளது. தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தனிமையாக உணர்கிறார்கள், தங்களுக்கு யாரும் உதவுவதில்லை என எண்ணுகிறார்கள், சமூகம் தங்களை எடைபோடும் என எண்ணி அஞ்சுகிறார்கள். ஆகவே, தற்கொலையைப்பற்றிய உரையாடல்களை அதிகரிக்கவேண்டும், அதன்மூலம், தற்கொலையைச் சுற்றியிருக்கிற விலக்கப்பட்டதன்மையை நீக்கவேண்டும், அதேசமயம், அது ஒரு நோய் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும், அதைப்பற்றி விவாதிக்கும்போது, நுண்ணுணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.
தற்போது, தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது, ஆகவே, ஒவ்வொருவரும் அப்படியொரு நிகழ்வை அக்கம்பக்கத்தில் காண்பது சாத்தியமே. இதனால், தற்கொலை செய்துகொண்டவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என எல்லாரும் தீவிர அதிர்ச்சி, துயரத்தைச் சந்திக்கிறார்கள். இந்த நிகழ்வு அவர்கள்மீது பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது. தற்கொலையைப்பற்றிப் பேசும்போது, மனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள்:
தற்கொலை 'செய்துகொண்டார்' என்று சொல்வதுபற்றி...
தற்கொலைபற்றிய ஆரோக்கியமான உரையாடல்களை உருவாக்க, அதைப்பற்றிச் சமூகத்தில் இருக்கும் களங்கவுணர்வைப் போக்கக்கூடிய சரியான சொற்களை நாம் பயன்படுத்துவது முக்கியம். தற்கொலை 'செய்துகொண்டார்' என்ற சொல், முன்பு தற்கொலை ஒரு குற்றமாகக் கருதப்பட்டபோது உருவானது. அதன்பிறகு, தற்கொலைபற்றிப் பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன, அந்த எண்ணம் சிலருக்கு ஏன் வருகிறது என்பதுபற்றி நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர், முன்பைவிட இப்போது நாம் இதனை நன்கு புரிந்துகொண்டுள்ளோம். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, நாம் இந்தப் பிரச்னையை நுண்ணுணர்வுடன் அணுகவேண்டும், தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்களை அவதூறு செய்யக்கூடாது. ஆகவே 'தற்கொலை செய்துகொண்டார்' என்பதுபோன்ற சொற்களைக் குற்றம்போல் சொல்வதைத் தவிர்க்கலாம், 'வாழ்க்கையை முடித்துக்கொண்டார்' என்பதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.