தன் கதையைச் சொல்லுவது எப்படி?

தன் கதையைச் சொல்லுவது எப்படி?

தன்னுடைய கதையைச் சொல்லுதல்

பாலியல் அதிர்ச்சி அனுபவம் மிகவும் தனித்துவமான இயல்பைக் கொண்டது. அது ஒவ்வொரு தனிநபருக்கும் மாறுபடும்; பல காரணிகள் அதைப் பாதிக்கின்றன: அனுபவங்களின் வரையறை, அவற்றின் காலகட்டம், குற்றம் புரிந்தவருடன் உறவு, குற்றம் நிகழ்ந்த சூழல்… இவையெல்லாம் வெறும் தொடக்கம்தான். பாலியல் வன்முறையானது ஒரு தனிநபருடைய பாதுகாப்புக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. அது ஒருவரைத் தன்னுடைய ஆற்றலையெல்லாம் இழந்துவிட்டதுபோல் உணரச்செய்யலாம். இப்படியொரு நிகழ்வைச் சந்தித்துத் தப்பிப்பிழைத்த ஒருவருடைய சுய உணர்வை மாற்றியமைக்கும் சாத்தியம் அதற்கு உண்டு. காரணம், உள்ளார்ந்ததாகிவிட்ட நாணவுணர்வு, குற்றவுணர்வு, சினம், அச்சம் மற்றும் குற்றம்சாட்டுதல். அதனால்தான், பாலியல் வன்முறையைச் சந்தித்தவர்களால் உடனே அதற்கு எதிர்வினையாற்றவோ சண்டையிடவோ, தங்களுக்கு என்ன நடந்தது என்பதைப்பற்றிப் பேசவோ, சட்ட நடவடிக்கையை நாடவோ இயலுவதில்லை. “ஆனால், அவர் ஏன் இதுவரை இதுபற்றிப் பேசவில்லை?” என்பதுபோன்ற எதிர்வினைகளைப் பெறும்போது, இப்படிப்பட்ட நிகழ்வைச் சந்தித்துத் தப்பிப்பிழைத்தவர்களுக்குக் கூடுதல் சுமை உண்டாகலாம், அவர்கள் தங்களுடைய மௌனத்தை ஒரு தோல்வியாகக் காண்கிறார்கள்.

மக்கள் தங்களுடைய விவரிப்புகளுக்குக் குரல் கொடுப்பது முக்கியம், அதே நேரம், மௌனமானது ஒரு பாதுகாப்புணர்வை வழங்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். வன்முறை நிகழும்போது, பாதுகாப்புதான் முதலில் காணாமல் போகிறது; அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றதாகத் தோன்றும்விதங்களில் மக்கள் நடந்துகொள்கிறார்கள். அது ஓர் உறுதிப்படுத்தல் சுழலாகிறது. சமூகக் குழுவுடன் இரவு 8 மணிக்குக் குடிப்பது ஒரு நேர்விதமான அனுபவமாக அமைந்தால், மக்கள் அதை அடிக்கடி செய்கிறார்கள். அந்தப் பழக்கம் உறுதிப்படுத்தப்படுகிறது. நாணம், மிரட்டல், பாதிக்கப்பட்டவரைக் குற்றம்சாட்டுதல் போன்றவற்றால் ஆற்றல் பெற்ற ஒரு திட்டத்தை ஒரு பண்பாடு பெருகச்செய்யும்போது, எதுவும் பேசாமல் இருப்பதுதான் சூழ்நிலைக்கு ஏற்றது என்று தோன்றுகிறது. அது உறுதிப்படுத்தல் சுழலில் ஒரு பகுதியாகிவிடுகிறது.

அப்படியானால், தன்னுடைய விவரிப்பைப் பகிர்ந்துகொள்வதற்கு இதுதான் சரியான நேரம் என்று ஒருவர் எப்படித் தீர்மானிப்பது? இப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்துத் தப்பிப்பிழைத்தவர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன்; அவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய பாதுகாப்பு வரையறையை மறுகட்டமைப்பு செய்துள்ளார்கள், அதனால் தங்களுடைய சமூகத்தை மீண்டும் கட்டமைத்துள்ளார்கள். அவர்கள் இந்தத் தனிநபர்களைப்பற்றி அறிந்துகொள்ளவும் மதிப்பிடவும் விரும்புகிறார்கள், அதன்மூலம், பாதிக்கப்படக்கூடியவர்களாக உணர, உறுதித்தன்மையுடன் உணர, ஆதரிக்கப்படுவதாக உணர ஓர் இடத்தை உருவாக்க முனைகிறார்கள். தங்களுடைய கதையைப் பகிர்ந்துகொள்ளுமுன் அவர்கள் கவனத்துடன் செயல்படுகிறார்கள், அந்தப் பதற்றம் மிகவும் நியாயமானது.

ஒருவர் தன்னுடைய கதையைப் பகிர்ந்துகொள்ளுமுன் கருத்தில் கொள்வதற்கான உதவிக் கேள்விகள் சில, இதோ:

  • நான் என்னுடைய கதையை எப்படிப் பகிர்ந்துகொள்கிறேன் என்பதற்கு இவர்/இந்தச் சமூகம் எப்படி எதிர்வினையாற்றும்?

  • இவருடைய எதிர்வினையை ஏற்றுக்கொள்ள நான் எந்த அளவு தயாராக உணர்கிறேன்?

  • ஆதரிக்கப்படுவதாக உணர்வதற்கு எனக்கு என்னென்ன விஷயங்கள் தேவை?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் ஒரு நல்ல தொடங்குமிடமாக இருக்கும். ஒரு விஷயத்திலிருந்து தப்பிப்பிழைத்த ஒருவர், அதைச் சந்திக்காத இன்னொருவருக்கு அந்த அதிர்ச்சியை எப்படிச் சொற்களால் விவரிக்கிறார் என்ற திறமையை நாம் வீரத்துடன் தொடர்புபடுத்துகிறோம், இது கிட்டத்தட்ட ஒரு பதக்கத்துக்குச் செலுத்தவேண்டிய ஒரு விலையைப்போல் அமைகிறது. இல்லை, ஒரு விஷயத்திலிருந்து தப்பிப்பிழைத்ததால்தான் அவர் வீரர். இந்த விரிதிறனை ஏற்கவேண்டும். ஒருவருடைய பாலியல் அதிர்ச்சியைப்பற்றிய கதைகளை வெளிப்படுத்துவது ஒரு பெரிய தனிப்பட்ட விலையுடன் வருகிறது; அதைப் பகிர்ந்துகொள்ள ஒருவர் தயாராக இருக்கிறார் என்பதை அவர்மட்டும்தான் தீர்மானிக்க இயலும். ஒருவரால் தன்னுடைய அதிர்ச்சியைப் பகிர்ந்துகொள்ள இயலவில்லை, அல்லது, அவர் அதைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை என்றால், அந்த அதிர்ச்சியின் வலி குறைந்துவிடாது.

பாலியல் வன்முறை நிகழ்த்தப்படும்போது, செயல்பாடானது முரட்டுத்தனமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. தனக்கு நிகழ்ந்ததை ஒருவர் தன்னுடைய பார்வையாளர்கள்முன்னால் வரிசையாகச் சொல்லவேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டால், அது திரும்பத்திரும்ப எடுத்துக்கொள்ளப்படலாம். அதிர்ச்சிக்குப் பிந்தைய பயணத்தில் ஒருவர் எங்கு இருக்கிறார் என்பதைப் பொறுத்து, தன்னுடைய கதையைப் பகிர்ந்துகொள்வதுபற்றிய யார்-எப்போது-எங்கு-எவ்வளவு ஆகியவற்றை அவரே தீர்மானிக்கலாம். இதை அவர் நினைவில் கொள்ளவேண்டும்.

மீட்சியை வரையறுத்தல்

அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தம், அதிலிருந்து மீளுதல் ஆகியவை ஒரு நேர்கோட்டுச் செயல்முறை இல்லை. இதில் மனமுழுமை உதவலாம். அதிர்ச்சியைச் சந்தித்துத் தப்பிப்பிழைத்தவர்கள் அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தத்தை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதற்குச் சமாளிக்கும் வியூகங்கள், சமாளிக்கும் திறன்கள் ஆகியவை பெரிய பலங்களாக இருக்கலாம். தன்னுடைய பாதுகாப்பான சமூகத்தின் இணைந்த வலைப்பின்னலுக்குள் ஒருவரிடமோ சிலரிடமோ தன்னுடைய கதையைப் பகிர்ந்துகொள்வது, அவர் தன்னுடைய எல்லைகளைப் பயிற்சியெடுக்க உதவலாம். மக்கள் அவரிடம் கூடுதல் தகவல் கேள்விகளைக் கேட்கலாம்; ஆனால், அவர்களுடைய குறுகுறுப்புக்குத் தீனிபோடவேண்டியது அவருடைய பொறுப்பு இல்லை. சொல்லமாட்டேன் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை; தகவல்களைத் தெரிவிக்காமலிருப்பதில் (அல்லது, தான் விரும்பும் அளவுக்குமட்டும் தகவல்களைத் தெரிவிப்பதில்) எந்தத் தவறும் இல்லை, உறுதியாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. தன்னுடைய கதையைச் சொல்வது, அதிர்ச்சியான அந்த அனுபவத்தை மீண்டும் வாழ்ந்துபார்த்தலையும் தூண்டலாம். இந்தத் தூண்டிகள் உளவியல் தூண்டுதல்களாக அமைந்து பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவரலாம்: நினைவுகள், உணர்வுகள் அல்லது உடல்சார்ந்த போக்குகள், அவர் சந்தித்திருக்கக்கூடிய வலி அல்லது உணர்வில்லாத உணர்வு உள்பட. ஆகவே, ஒருவர் வசதியற்று உணர்கிறார், பேச்சிலிருந்து விலகிக்கொள்ள விரும்புகிறார் என்றால், அவ்வாறு செய்யும் உரிமை அவருக்கு உண்டு.

இயன்றபோதெல்லாம், தன்னிடமே கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டும். கேட்பவர்களிடம் வலுவான உணர்வு எதிர்வினைகள் இருக்கலாம்; எல்லைகளை வரைவது மிகவும் சரி. அவர்களுடைய எதிர்வினைகள் அவர்களுடைய அனுபவங்களுக்குப் பொருந்துபவை, அந்தக் கணத்தில் அவர்களை அமைதிப்படுத்துவது இவருடைய வேலையாக இருக்கவேண்டும் என்று தேவையில்லை. ஒருவருடைய கதையான ஒப்பீட்டளவில் பெரிய சமூகமொன்றில், சமூக ஊடகங்களில், அல்லது அதுபோன்ற இடங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டால், அவருக்கு இணையத்துக்கு வெளியில் ஒரு வலுவான சமூகம் இருப்பது அவருக்கு ஆதரவாக இருக்கும். ஒருவர் தன்னுடைய கதையைச் சொல்வது ஆதரவான சமூகங்களை, நட்பைத் திறந்துவைக்கலாம்; அதேசமயம், அதனால் பிறருடைய தொந்தரவுக்கு ஆளாகிற, இணையத்தில் துன்புறுத்தப்படுகிற ஆபத்து அவருக்கு ஏற்படலாம், முன்பின் தெரியாதவர்கள் அவருடைய அனுபவத்தைப்பற்றி அவரிடம் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்கத்தொடங்கலாம். இந்த அம்சங்கள் தூண்டிகளாக அமையலாம், இணையத்துக்கு வெளியில் உறுதிப்படுத்துகிற ஒரு சமூகம் அவருக்கு இருந்தால், தொடர்ச்சியான ஆதரவை, ஆறுதலை அளிக்கும் மூலமாக அது அமையலாம்.

ஒருவர் தன்னுடைய சமாளிக்கும் வியூகங்களைத் தன்மயமாக்கவேண்டும்

இத்துடன், தன்மயமாக்கப்பட்ட சமாளிக்கும் வியூகங்களும் வலிமைகளாக அமையலாம்: அவருக்கு உடற்பயிற்சி பிடிக்குமா? அல்லது, ஒரு விளையாட்டா? யோகாசனமா? தியானப் பயிற்சிகளா? அவர் தன்னுடைய உடலுடனும் மூளையுடனும் இணைவதற்காகத் தொடர்ந்து செய்யக்கூடியது என்ன? இந்த இரண்டையும் அவர் எப்படிச் சுறுசுறுப்பாக இணைத்து ஊடாடுகிறார்? மனமுழுமையைத் தொடர்ச்சியாக இணைப்பது, உடலில் எதிர்வினைகளை அடையாளம் காணுதல், உணர்தலை வழக்கத்தைவிட விரைவாக்க உதவுகிறது. துயரத்தைத் தொடக்கத்திலேயே கிள்ளி எறிவதற்கும், தூண்டிகளால் உண்டாகும் அதிர்ச்சிக்குப் பிந்தைய துயரப் பெருக்கத்தைக் குறைக்கவும் இது உதவலாம். இந்த நிலையில் உள்ளவர்கள் சிகிச்சை பெறுவது வலுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது; அப்படிச் சிகிச்சை பெறுவோர் தங்களுடைய கதையைப் பகிர்ந்துகொள்வதற்குமுன்னால் ஒரு சமாளிக்கும் வியூகத்தை உருவாக்குவது, ஒரு திட்டத்தைத் தயார்நிலையில் வைத்திருப்பது உதவும். அதிர்ச்சியைச் செயல்முறைப்படுத்தல், ஒரு விவரிப்பைப் பொதுவில் வெளியிடுவதன் பொருள், முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் உணர்வுப் பாதுகாப்புக்கான வியூகங்களை உருவாக்கி அமைத்தல் ஆகியவற்றில் இது உதவலாம்.

பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய இரு சொற்களும் கடந்த சில வாரங்களில் நிகழ்ந்த உரையாடல்களில் அதிகம் பேசப்பட்டவையாகும். மக்கள் மீறலுக்கான தகுதிகளைப்பற்றிப் பேசினார்கள், கதைகளுக்குப் பதில்சொன்னார்கள், குற்றம் புரிந்தவர்களைப் பொறுப்பாளியாக்கினார்கள், தீவிரச் செயல்பாடுகளில் ஈடுபட்டார்கள், ஒரு சமூகத்தைக் கட்டமைத்தார்கள், ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள மிகவும் கடினமாகப் போராடினார்கள். பல வெற்றிகள், சில தோல்விகள், எண்ணற்ற பாடங்கள். பனியில் பாதுகாப்பு ஆடைகள் இல்லாமல் ஒரு நாள்முழுக்கச் சென்றுவந்தால், சளியும் இருமலும் வரலாம். அங்கு பாதுகாகும் காரணிகள் இல்லை. அதுபோல, உணர்வுப் பாதுகாப்புக் காரணிகள், பாதுகாப்பு வியூகங்கள் இல்லாவிட்டால், அதிர்ச்சிக்குப் பிந்தைய தூண்டிகள் பலவும் செயலுக்கு வரலாம். மக்களுடைய உடல் மற்றும் மன நலன் சம அளவு முக்கியமானவை; இவற்றில் ஒன்று இன்னொன்றைவிடப் பெரியது என ஒருபோதும் சொல்ல இயலாது. குணமாதல் என்பது நேர்கோட்டு வழி இல்லை; அது ஒரு பயணம்; அதில் உதவி பெறுவது எப்போதும் நல்லது.

சிகாகோவைச் சேர்ந்த அதிர்ச்சி உளவியலாளர் ருசிதா சந்திரசேகர், LGBTQIA சமூகத்தினர் உள்ளிட்ட பாலின அடிப்படையிலான வன்முறையில் தப்பிப்பிழைத்தவர்களுக்கு மன நலச் சேவைகளை வழங்குகிறார். அவருடைய சிறப்பு ஆர்வங்கள், அதிர்ச்சியிலுள்ளோருக்கான தகவலறிந்த சிகிச்சை, தெற்கு ஆசியச் சமூகங்களில் மனநலத்தின்மீதுள்ள களங்கத்தைக் குறைத்தல் மற்றும் நலப்பராமரிப்பு வளங்களில் விளிம்புநிலையாக்கம் மற்றும் ஒடுக்கத்தின் தாக்கத்தை ஆராய்தல்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org