வீட்டிலிருந்து பணியாற்றும்போது மன நலனைக் கையாளுதல்

கொரோனாவைரஸ் நோய்ப்பரவலால் பலரும் வீட்டிலிருந்து பணியாற்றத் தொடங்கியுள்ளார்கள். இந்த மாற்றத்துக்கு அவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் எளிதில் தயாராவது எப்படி?
வீட்டிலிருந்து பணியாற்றும்போது மன நலனைக் கையாளுதல்

COVID-19 நோய்ப்பரவல் காரணமாகப் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி மாறியுள்ளன. வீட்டிலிருந்து பணியாற்றுவதில் பல சவால்கள் இருந்தாலும், சில குறிப்பிட்ட நடவடிக்கைகளின்மூலம் ஊழியர்கள் தங்களுடைய சொந்த உணர்வு நலனைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

இந்த நேரத்தில் அச்சம், அதிர்ச்சி அல்லது குழப்பத்தை உணர்வது இயல்புதான்

இந்தச் சூழலில் அச்சம், அதிர்ச்சி, சினம், குழப்பம் மற்றும் எரிச்சல் உணர்வுகள் வருவது இயல்புதான். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்:

  • எதை எதிர்பார்ப்பது என்று அறியாமலிருத்தல், இப்போதைய சூழ்நிலைக்கேற்ப எப்படி மாறிக்கொள்வது என்பதுபற்றி உறுதியாகத் தெரியாமலிருத்தல்.

  • இந்தச் சூழல் எவ்வளவு நாள் தொடரும், இது எந்தத் திசையில் செல்லக்கூடும் என்பதுபற்றி உறுதியற்ற நிலைமை நிலவுதல்.

  • வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கேற்ப மாறிக்கொள்ளும் சவால். எடுத்துக்காட்டாக, இணைய இணைப்பு போன்ற கருவி சார்ந்த சவால்கள் மற்றும் தனிப்பட்ட, குழு இலக்குகளை மறுமதிப்பீடு செய்தல் போன்ற பணி சார்ந்த சவால்கள்.

வீட்டுவேலை, முதியவர்களைக்கவனித்துக்கொள்ளுதல், குழந்தைகளைக்கவனித்துக்கொள்ளுதல்போன்றபலபொறுப்புகளுக்குநடுவில்பணியில்கவனம்செலுத்தமுயலுதல்.

வீட்டில் பணியேற்றுவதற்கேற்ப மாறிக்கொள்ளுதல்

ஒருவர் இதற்குமுன் வீட்டிலிருந்து வேலை செய்திருந்தால், அல்லது, நெடுங்காலமாகவே இதைச் செய்துகொண்டிருந்தாலன்றி, திடீரென்று வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்குவது சவாலாக இருக்கலாம். இந்த மாற்றத்தை எளிதாக்குவதற்கான சில வழிகளைத் தெரிவிக்கிறார் பணியிடத் தெரிவுகளுக்கான பன்னாட்டு மருத்துவ உள் கட்டமைப்பு இயக்குநரான மௌலிகா சர்மா.

வீட்டிலிருந்து பணியாற்றுவதைச் சுற்றி ஓர் ஒழுங்கு அல்லது வழக்க உணர்வை உருவாக்கலாம். இதற்குச் சில உத்திகள்:

  • வேலை செய்வதற்கென்று ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுதல். தன்னுடைய படுக்கையிலிருந்து அல்லது ஓர் ஈஸிசேரிலிருந்து வேலை செய்யாமலிருத்தல். ஒரு மேசை அல்லது பணிமேசையில் பணியாற்றுதல்; அவ்வாறு பணியாற்றும் இடத்தில் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் இருப்பதை உறுதிசெய்தல்.

  • பணி செய்கிற மனநிலைக்குச் செல்வதற்காக, தன்னுடைய வழக்கமான அலுவலக உடையை அணிந்துகொள்ளுதல்.

  • அலுவலகத்தில் இருந்து பணியாற்றினால் என்ன செய்வோமோ அதையே வீட்டிலும் பின்பற்றுதல், அதாவது வழக்கமான பணி மற்றும் இடைவேளை நேரங்களைப் பின்பற்றுதல்.

  • வீட்டில் பணி செய்தல் மற்றும் தன்னுடைய வாழ்க்கை ஆகியவற்றுக்கிடையில் தெளிவான எல்லைகளை வகுத்தல், இதன்மூலம், விழித்திருக்கிற எல்லா நேரங்களிலும் பணியாற்றிக்கொண்டிருப்பதைத் தடுக்கலாம்.

  • கூட்டங்களுக்கான நேர அட்டவணைகளைக் கவனமாகப் பின்பற்றுதல். வீட்டிலிருந்து வேலை செய்யும்போது கூட்டங்களை மறப்பது எளிதாக இருக்கலாம்; ஆகவே, ஒவ்வொருவரும் தேவையான எச்சரிக்கை மணிகளை அமைத்துக்கொள்ளவேண்டும், அல்லது, தேவைப்பட்டால், பணி நாட்காட்டியைத் தங்களுடைய தொலைபேசியுடன் ஒத்திசையச்செய்யலாம்.

  • தன்னுடைய பணி சார்ந்த மற்றும் நிறுவன இலக்குகளைப் பின்பற்றவேண்டும்.

  • உடன் பணியாற்றுவோருடன் தொடர்பில் இருக்கவேண்டும். அவர்களுடன் ஒவ்வொரு நாளும் பேசவேண்டும், அதன்மூலம் அனைவரும் ஒன்றாக இணைந்திருக்கிற உணர்வு உண்டாகும்.

தன்னுடைய குடும்பத்தினருடன் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளவேண்டும்

  • வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் என்றால், இருவருக்கும் தனித்தனிப் பணியிடங்களை அமைக்க இயலுமா என்று காணுங்கள், இதன்மூலம் அவர்கள் ஒவ்வொருவரும் தொந்தரவின்றிப் பணியாற்றலாம். இது, படிக்கிற, கலை, கதைகளை வாசித்தல் போன்ற வெவ்வேறு செயல்பாடுகளில் நேரம் செலவிடுகிற குழந்தைகளுக்கும் பொருந்தலாம்.

  • வீட்டிலிருந்து பணியாற்றுகிற ஒருவர், தன்னுடைய நேர அட்டவணையில் இவற்றை எப்படிப் பொருத்துவது என்பதுபற்றிக் குடும்பத்தினருடன் பேசவேண்டும், அனைவரும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்தச் சந்திப்பின்போது அவர்கள் இந்தக் கேள்விகளில் சிலவற்றையோ அனைத்தையுமோ பேசலாம்: ஒருவர் வீட்டிலிருந்து பணியாற்றும் மணிநேரங்கள் என்ன? அதில் அவருடைய குடும்பம் எப்படிப் பொருந்துகிறது? அவருடைய குடும்பத்தின் உரையாடல்/செயல் நேரங்கள் எவை? அவர் தன்னுடைய வேலையைத் தொந்தரவின்றிச் செய்யும்வகையில் தொலைக்காட்சிப் பெட்டி போன்றவற்றிலிருந்து வருகிற ஒலி அளவுகளை எப்படிக் குறைக்கலாம்?

  • வீட்டுப் பணியாளர்கள் இப்போது வேலைக்கு வருவதில்லை, ஆகவே, வீட்டு வேலைகளை அனைவரும் எப்படிப் பகிர்ந்துகொள்ளலாம்? தேவைப்பட்டால், இதற்கென்று ஒரு நேர அட்டவணையை உருவாக்கலாம், இதன்மூலம், பணி நேரங்களும் வீட்டு வேலைகளும் ஒன்றையொன்று குறுக்கிடாதபடி பார்த்துக்கொள்ளலாம்.

  • குடும்பத்தினர் அனைவரும் ஒருவரோடொருவர் இணைந்திருப்பதற்காகக் குடும்பச் செயல்பாடுகளைத் திட்டமிடலாம்.

இந்த உறுதியற்ற சூழ்நிலையை எல்லாரும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றாலும், அதைச் சிலர் நன்றாகச் சமாளிக்கலாம், மற்றவர்கள் அந்த அளவுக்குச் சமாளிக்க இயலாமல் திணறலாம். இது தன்னை மிகவும் சிரமப்படுத்துவதாக ஒருவர் உணர்ந்தால், அல்லது, இந்தச் சின்னங்களில் எவற்றையேனும் கவனித்தால், அவர் உடனடியாகத் தன்னுடைய ஊழியர் உதவித் திட்டப் (EAP) பிரதிநிதியைத் தொடர்புகொள்ளவேண்டும். ஒருவேளை, அவருடைய நிறுவனத்தில் ஓர் EAP சேவை இல்லாவிட்டால், அவர் ஓர் உதவித் தொலைபேசி எண்ணை அழைக்கலாம், அல்லது, தனக்கு அருகிலுள்ள ஒரு மன நல வல்லுனரை அணுகலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org