முதியவர்களின் நலனை மேம்படுத்த என்ன செய்யலாம்?

வயது முதிர்வானது, உடல், புலணர்வு, சமூக மற்றும் குடும்ப இழப்புகளைக் கொண்டுள்ளது, மற்றும் அது அதிகரித்த இயலாமை நிகழ்வுகள் மற்றும் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளில் உதவிக்கான தேவையையும் கொண்டுவருகிறது. வயதுமுதிர்ந்தவர்களுடைய உடல் நலம்குறித்துப் பல வலியுறுத்தல்கள் இருக்கும் அதே வேளையில், அதே வலியுறுத்தல் அல்லது முக்கியத்துவம் அவர்களுடைய மன நலத்தின் மீது வைக்கப்படுவதில்லை. வயதாவது குறித்து எதிர்மறைக் கருத்துகள் கொண்டிருப்பது, குறைந்த செயல்திறன் மற்றும் அதிகரித்த இறப்பு விகிதத்துடன் தொடர்புகொண்டுள்ளதை ஆய்வு காட்டுகிறது (லெவி et al. 2002). வெற்றிகரமான வயது முதிர்வை ஊக்குவிப்பது வயதானவர்களுடைய உடல் மற்றும் மனநலத்தைத் தொடர்வதில் ஒரு முக்கியமான பகுதியாகும்.

வயதானவர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்னைகள்: கவலை, துக்கம், தனிமை (சமூகம் & இருப்பிடம்), மோசமான உடல்நிலை, போதிய சமூக ஆதரவு வலைப்பின்னலின்மை (வலிமையற்றவை, செயல்படாதவை), தற்போதைய வாழ்க்கை நிலையில் போதிய சமூகச் சூழ்நிலையின்மை அல்லது சிக்கலான சமூக சூழ்நிலை போன்றவை.

வயதானவர்களின் நலனை மேம்படுத்துவதற்கான சில வழிகள்:

·       ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றல்: உடல்சார்ந்த செயல்களைப் பின்பற்றுவது, குறிப்பாக வயதான நாட்களில், உடல் மற்றும் மனநலனை அதிகரிக்கிறது, ஏனெனில் வழமையான உடற்பயிற்சிகள் பொது நலம், இயங்குதன்மை மற்றும் சுதந்தரத்தில் நேர்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் அவை குறைந்த மனச்சோர்வு மற்றும் பதற்றத்தின் இடருடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. உடற்பயிற்சிகள் மனநிலை மற்றும் சுய மதிப்பையும் மேம்படுத்துகின்றன. எந்த வகையான உடல் செயல்பாடுகளும் தொடங்குவதற்கு ஏற்றவை, எடுத்துக்காட்டாக, நடத்தல், தோட்டப் பராமரிப்பு, நடனம், நாயை நடைக்கு அழைத்துச்செல்லுதல், அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது போட்டி விளையாட்டுகளில் பங்கேற்றல். வயதான காலத்தில், சிறந்த ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்வது நாள்பட்ட நோய்களை அழிப்பதுடன் நோயிலிருந்து மீட்சி அடைவதிலும் உதவுகிறது.

·       சம்பளத்துடன் அல்லது தன்னார்வலராக வேலை செய்வதன்மூலம் பயனுள்ள வகையில் செயல்பாட்டிலேயே இருப்பது வயதானவர்களுடைய உடல்நலனுக்கு நல்லது. ஏனெனில், அது அவர்கள் சமூகத்திற்குப் பங்களிப்பதன்மூலம் வரும் நல்லெண்ணத்தை உணர்வதற்கு உதவுகிறது. இது வயதான நபர்களின் பொருளாதாரச் சூழ்நிலையிலும் சமூகத்தில் பங்கெடுக்கும் அவர்களுடைய நிலையிலும் தாக்கம்கொண்டிருப்பதையும் காண முடிகிறது (மார்மோட் et al. 2003).

·       சமூக வலைப்பின்னல்களை வலிமைப்படுத்துவது, வயதானவர்கள் வெவ்வேறு வயதுக் குழுக்களுடன் இணைவதற்கு உதவுவதுடன், சமூகத்தில் அதிகக் கவனிப்பையும் ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக,பல குடியிருப்புச் சமூகங்கள் புத்தக மன்றங்களைக் கொண்டுள்ளன, அவற்றில் இளம் தன்னார்வலர்கள் வயதானவர்களுக்காக வாராந்திரக் கதைபடிக்கும் அமர்வுகளை நடத்துகிறார்கள்.

·       சமூக உரையாடல்களைத் தொடர்தல்: சமூகத் தனிமைப்படுத்தல் மற்றும் தனிமை ஆகியன உடல் மற்றும் மனநலன் இரண்டையும் பாதிப்பதால், குறிப்பாக, வயது முதிர்ந்த முதியவர்களில், உறவுகளைக் கட்டமைப்பதன்மூலம் நலனை வளர்த்தெடுக்கச் சமூக ஆதரவை ஊக்குவிப்பது முக்கியமானதாக மாறுகிறது. இதனை நோக்கிய சில படிகளில், நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் வழக்கமான இணைந்திருத்தல், புதிய நண்பர்களைப் பெற முயற்சியெடுத்தல் மற்றும் மாறுதல்களின்போது ஆதரவுக்குழுக்களைக் கண்டறிதல் போன்றவை உண்டு (குறிப்பாக, ஒருவர் உடல்நலம் அல்லது துக்கம் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொண்டால், அவர் எதிர்கொள்வதை ஒத்த நிலையை எதிர்கொள்பவர்களுடன் இணைவது வலியைக் குறைக்க உதவும்).

பெரும்பாலும் வயது முதிர்வு சமாளிக்கக் கடினமான மாற்றங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டாலும், தனிமை உணர்வு, தனிமை மற்றும் நம்பிக்கையின்மையைத் தோற்றுவித்தாலும், சமூகத்திலுள்ள மற்றவர்களுடைய உயிர்ப்பான கவனிப்பு, வயதானவர்கள் எதிர்மறை உணர்வுகள் அல்லது குறைந்த உணர்வுநிலையை எளிதில் கையாள உதவும்.

குறிப்புகள்: லெவி, B. R., ஸ்லேடு, M. D., குன்கல், S. R., & கார்ஸி, S. V. (2002). வயது முதிர்வு குறித்த நேர்விதமான சுய கருத்தால் வாழ்நாள் அதிகரிக்கிறது. ஆளுமை மற்றும் சமூக உளவியல் ஆய்விதழ், 83, 261- 270.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org