இந்தியாவில் ஒரு தம்பதிக்குக் குழந்தை பிறக்கப்போகிறது என்றால், அந்த ஆண் அதற்கான நிதியை வழங்குவதோடு நின்றுவிடுவது வழக்கம்; தந்தையாகப்போகும் ஒருவர் அதற்குமேல் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை. கர்ப்பக் காலகட்டத்தில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தாலும், புதிய தாய்மார்கள் குழந்தையின் நலனைப்பற்றி, தங்களுடைய சொந்த நலனைப்பற்றி, தாங்கள் சந்திக்கும் உயிரியல் சிக்கல்கள், சமூக மற்றும் கலாசார அழுத்தங்களைப்பற்றிப் பதற்றம், கவலையும் கொள்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், அந்தப் பெண்ணுக்கு அநேகமாக மிக நெருங்கிய தோழராக இருக்கக்கூடிய துணைவர், தன்னுடைய துணைவியின் வாழ்க்கையில் தன் பங்களிப்பை அதிகரிப்பது முக்கியம். கர்ப்பத்தின்போது கணவர்கள் முழுமையாகப் பங்கேற்காமல் தயங்கக் காரணம், தாங்கள் எப்படி உதவலாம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை; அத்துடன், பிரசவம், குழந்தைகள், அவற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகள் எல்லாம் 'பொம்பளைங்க சமாசாரம்' என்கிற தவறான நம்பிக்கையும் சேர்ந்துகொள்கிறது. பல நேரங்களில், பங்கேற்கும் துணைவர்களைக் கொண்ட பெண்களுக்கு உளவியல் அழுத்தம் குறைவாக உள்ளது; கர்ப்பக்காலத்திலும் குழந்தை பிறந்தபிறகும் அவர்கள் மற்றவர்களைவிடச் சிறப்பாக உணர்கிறார்கள். அப்படியானால், தந்தையாகப்போகும் ஒருவர் என்ன செய்யலாம்?